02. அர்ச்சியசிஷ்ட சிலுவை மந்திரம்!


ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா! பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துவினுடையவும் நாமத்தினாலே. ஆமென்.

1. அர்ச்சியசிஷ்ட என்கிற வார்த்தைக்கு அர்த்தமென்ன?

வணக்கத்துக்குரிய (மேன்மைக்குரிய) என்று அர்த்தமாகும்.

2. சிலுவை என்பது எது?

நம்மை இரட்சிக்கிறதற்காக சேசுநாதர் சுவாமி அறையுண்ட மரமாம்.

3. சேசுநாதருடைய சிலுவையை அர்ச்சியசிஷ்ட சிலுவை என்று சொல்வது ஏன்?

சேசுநாதர் சிலுவையில் அறையுண்டு அதில் மரணமான படியால் அதை அர்ச்சியசிஷ்ட சிலுவை என்கிறோம்.

4. அடையாளம் என்றால் என்ன?

குறித்துக் காட்டுதல்.

5. சத்துரு என்றால் யார்?

ஒருவனுடைய பகையாளி அல்லது விரோதியே அவனுடைய சத்துரு.

6. இவ்விடத்தில் சத்துருக்கள் என்னும் வார்த்தையால் குறிக்கப் பட்டவர்கள் யார்?

உலகம், பசாசு, சரீரம் ஆகிய இம்மூன்றுமே மனிதனுடைய பகையாளிகள்.

7. எங்களை இரட்சித்தருளும் என்பதற்கு அர்த்தம் என்ன?

எங்களை மீட்டுக் காப்பாற்றியருளும் என்று அர்த்தமாம்.

8. சர்வேசுரன் என்றால் யார்?

சர்வத்துக்கும் கர்த்தாவான ஆண்டவரே சர்வேசுரன்.

9. பிதா என்னும் வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

தகப்பன் என்பது அர்த்தம்.

10. சுதன் என்பதற்கு அர்த்தம் என்ன?

குமாரன், மகன் என்று அர்த்தம்.

11. இஸ்பிரீத்துசாந்து என்னும் வார்த்தைக்கு அர்த்தமென்ன?

இலத்தீன் மொழியில் இஸ்பிரீத்துசாந்து என்கிற வார்த்தைக்கு பரிசுத்த ஆவி என்று அர்த்தமாம்.

12. நாமத்தினாலே என்றால் என்ன?

பெயரால் மன்றாடுகிறோம் என்று அர்த்தமாகும்.

13. ஆமென் என்பதற்கு அர்த்தம் என்ன?

யூத பாஷையில் அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தம்.

கருத்துகள்