ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...
7. எத்தனை வகை வேலையுண்டு?
அடிமை வேலை, சுயாதீன வேலை, சாதாரண அல்லது பொது வேலை ஆகிய இம்மூன்று வகையுண்டு.
8. அடிமை வேலை என்பதென்ன?
எந்த வேலைகளில் புத்தியைப் பயன்படுத்துவதை விட அதிகமாக சரீரப் பிரயாசத்தைக் கொண்டு உழைத்து, முக்கியமாய்ச் சரீர நன்மைக்காகச் செய்கிறோமோ, அவைதான் அடிமை வேலைகள். சாதாரணமாய் இப்பேர்ப்பட்ட வேலைகள் கூலியாட்களாலும், ஊழியராலும், தொழிலாளிகளாலும், குடியானவர்களாலும் செய்யப்படும்.
9. ஒரு சில உதாரணங்களைச் சொல்லு.
உழுவதும், விதைப்பதும், அறுப்பதும், போர் அடிப்பதும், மரங்கள் வெட்டுவதும், நெசவு வேலை, தச்சு வேலை, கொத்து வேலை, கொல்லன் வேலை, தையல் வேலை செய்வதும், செபமாலை, உத்தரியம், விசித்திரப் பூ வேலை பண்ணுவதும், இன்னும் இவை போன்றவை சரீரப் பிரயாசையான வேலைகள்.
10. சுயாதீன வேலைகள் ஆவதென்ன?
சரீரப் பிரயாசை அதிகமில்லாமல் புத்தியின் தேர்ச்சிக்காக அல்லது அறிவு வளர்ச்சிக்காக விசேஷமாய் புத்தியைக் கொண்டு செய்யப்படும் வேலைகளாம். உதாரணமாக: எழுதுகிறது, வாசிக்கிறது, படிக்கிறது, படிப்பிக்கிறது, சித்திரம் வரைகிறது, சங்கீதம் பழகுகிறது.
11. சாதாரணமான அல்லது பொது வேலைகளாவதென்ன?
யாதொரு விசேஷ தொழிலாளிக்குரிய வேலையாயிராமல், சகல மனிதராலும் செய்யப்படக் கூடிய வேலைகளாம். உதாரணமாக: ஆடுமாடுகளை மேய்க்கிறது, அன்று மாடுகளுக்கு வேண்டிய புல் அறுக்கிறது, சமைக்கிறது, தண்ணீர் கொண்டுபோகிறது முதலிய வழக்கமான வீட்டு வேலைகள்.
12. ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் எந்த வேலைகளைச் செய்யக் கூடாது?
அடிமை வேலைகள் செய்யவே கூடாது.
13. ஏன் சர்வேசுரன் அடிமை வேலைகளை விலக்கியிருக்கிறார்?
(1) மனிதன் அவருடைய சர்வ அதிகாரத்தை அங்கீகரிக்கும் படியாகவும்,
(2) அடிமை வேலைகளால் இடைஞ்சல்படாமல் ஞாயிறு நாளைப் பரிசுத்த விதமாய்ச் செலவழிக்கும்படியாகவும்.
14. ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் அடிமை வேலை செய்தால், எப்பேர்ப்பட்ட பாவமாகும்?
(1) தொடர்ச்சியாய் உழைக்காமல், விட்டு விட்டு வேலை செய்பவன் முதலாய், இரண்டரை மணி நேரத்துக்குக் கஷ்டமான வேலை செய்தால், சாவான பாவம் கட்டிக்கொள்கிறான். ஆகையால் யாதொருவன் ஞாயிற்றுக்கிழமையில் பல தடவைகளில் வேலை செய்தால், சாவான பாவத்துக்கு வேண்டிய நேரம் ஆனவுடனே அவன் சாவான பாவம் கட்டிக் கொள்கிறான்.
(2) எளிதான வேலை மூன்று மணி நேரத்துக்குச் செய்தால், சாவான பாவமாகும்.
(3) உழைத்த நேரம் இதற்குக் குறைவாயிருந்தால், அற்பப் பாவமாகும்.
15. ஞாயிறு கடன் திருநாள் கடமைகளை நிறைவேற்றுவதற்கான நேரம் என்ன?
முந்தின நடுச்சாமத்திலிருந்து, பிந்தின நடுச்சாமம் வரையிலும் வேலை செய்யக்கூடாது.
16. பூசை கண்டபின் வேலை செய்யக்கூடாதா?
விசேஷ உத்தரவில்லாமல் செய்யக்கூடாது.
17. பணம் சம்பாதிக்க வேண்டுமென்கிற நோக்கமில்லாமல் நேரப் போக்குக்காக அடிமை வேலைகள் செய்யலாமா?
அடிமை வேலை செய்வதால், பணம் சம்பாதிக்காத போதும், இவைகளை ஞாயிற்றுக்கிழமையில் செய்யக்கூடாது. ஏனெனில், வேலைகளைச் செய்பவனுடைய நோக்கத்தினிமித்தம் இவைகளின் தன்மை ஒருபோதும் மாறிப் போகிறதில்லை.
18. அடிமை வேலை செய்யக் கற்பிக்கிறவர்கள் பாவம் கட்டிக் கொள்கிறார்களா?
அவ்வேலைகளைச் செய்யும்படி கற்பிக்கும் எஜமான்களும் முதலாளிமார்களும், மூன்றாம் கற்பனைக்கு விரோதமான பாவம் கட்டிக் கொள்ளுகிறார்கள்.
19. ஞாயிறு, கடன் திருநாட்களில் அடிமை வேலைகளை மாத்திரமா விலக்க வேண்டும்?
அடிமை வேலைகளை மாத்திரமல்ல; இன்னும் நியாயமான வழக்கம் அல்லது விசேஷ உத்தரவு இருந்தால் தவிர வியாபாரம், சந்தை கூடுதல், பிரசித்தமாய் விற்பனை, கொள்முதல் செய்தல் முதலியவைகளையும் விலக்க வேண்டும்.
20. ஞாயிறு கடன்திருநாட்களில் அடிமை வேலைகளை ஒருக்காலும் செய்யக்கூடாதா?
சரியான காரணமிருந்தால், அல்லது விசேஷ உத்தரவு பெற்றிருந்தால், வேலை செய்வது பாவமல்ல.
21. எந்த முகாந்தரத்தை முன்னிட்டு பாவமில்லாமல் அடிமை வேலைகளைச் செய்யக்கூடும்?
(1) தேவ ஊழியத்துக்கடுத்த வேலைகள்: உதாரணமாக: கோவிலைப் பெருக்குகிறது, பீடத்தை அலங்கரிக்கிறது, ஓஸ்தி செய்கிறது, தேர் அலங்கரிக்கிறது, சுற்றுப்பிரகாரத்துக்கு (பவனிக்கு) அவசியமான வேலை செய்கிறது.
(2) பொது மக்களின் நன்மைக்கு அவசியமான வேலைகள்; உதாரணமாக: மோட்டார் பஸ் அல்லது வண்டி ஓட்டுகிறது, ரிக்ஷா இழுக்கிறது.
(3) பிறர்சிநேகத்தினிமித்தம் செய்ய வேண்டிய வேலைகள்: உதாரணமாக: ஏழைக்கு அவசரமான வேலையை இலவசமாகச் செய்கிறது.
(4) கனத்த சங்கடமின்றி நிறுத்த முடியாத வேலைகள்: உதாரணமாக: சாமான்கள் செய்யப்படும் தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டால் பெரிய நஷ்டமுண்டாகக் கூடும்.
(5) தனக்கு அல்லது பிறருக்கு வரும் பெரிய நஷ்டத்தை அல்லது ஆபத்தைத் தவிர்ப்பதற்கு அவசரமான வேலைகள்: உதாரணமாக: விளைச்சல் மழையால் கெட்டுப் போகாதபடி அல்லது எந்தப் பொருளாவது நஷ்டப்படாதபடி செய்ய வேண்டிய வேலைகள்.
(6) நியாயமான வழக்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வேலைகள்: உதாரணமாக: கடைக்காரன் சரக்குகளை விற்கிறது ஆகிய இவைகளைச் செய்ய உத்தரவு உண்டு.
22. ஞாயிறு, கடன் திருநாட்களில் அடிமை வேலை செய்ய உத்தரவு கொடுக்கக்கூடியவர் யார்?
(1) அர்ச். பாப்பானவர் திருச்சபை முழுவதுக்கும் முதலாய்ப் பொதுவான உத்தரவு அளிக்கக் கூடும்.
(2) மேற்றிராணிமார்களும், குருக்களும் நல்ல காரணங்களினிமித்தம் சில விசேஷ சமயங்களில் உத்தரவு கொடுக்கலாம்.
23. ஞாயிறு, கடன் திருநாட்களில் சுயாதீன வேலைகளையும், பொது வேலைகளையும் செய்யலாமா?
அவைகளைச் செய்யத் தடையில்லை.
24. ஞாயிறு, கடன் திருநாட்களில் பணம் சம்பாதிக்கிறதற்காக சுயாதீன வேலைகளைச் செய்யலாமா?
செய்யலாம். ஏனென்றால், அவைகளைச் செய்கிறவனுடைய நோக்கத்தினிமித்தம் அவைகளின் இயல்பு மாறிப் போகிறதில்லை. இப்படியே ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பணத்துக்காகப் படிப்பிக்கலாம்.
குறிப்பு: ஞாயிறு, கடன் திருநாட்களில் பூசைகாணுதல் என்னும் கட்டளையின்பேரில் விளக்கம், திருச்சபை முதற் கட்டளையின் விளக்கத்தில் விவரித்துக் காட்டியிருக்கின்றது.
134. மேற்படி திருநாட்களை அனுசரியாத கிறீஸ்தவர்களுக்குச் சாதாரணமாய் வரும் கேடென்ன?
அவர்கள் ஆத்துமத்திற்குப் பாவதோஷம் உண்டாவதும் அல்லாமல், அவர்கள் குடும்பங்களில் நிர்ப்பாக்கியமும் வறுமையும் உண்டாவது வழக்கம்.
ஞாயிறு கடனை அனுசரியாததால் விளையும் கெடுதிகள் எவை?
(1) ஓயாமல் வேலை செய்வதால் சரீரத்துக்குச் சுகவீனம் ஏற்படும். மேலும் அவன் ஆஸ்திக்கும் பங்கம் ஏற்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வேலை செய்து ஆஸ்திக்காரரானதை நாம் பார்த்ததில்லை. அதற்கு விரோதமாய் சுவாமி ஆசீர்வாதம் இல்லாததால் அவன் ஏழையாய்ப் போவான்.
(2) குடும்பத்தில் பிரிவினை ஏற்படுகிறது. தகப்பன், மனைவி, மக்களைக் காண நேரமில்லாததால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிய போதிய அவகாசம் அவனுக்கு இல்லை. மேலும் தகப்பன் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படியாதிருக்கும் பொழுது, பிள்ளைகள் எப்படித் தகப்பனுக்குக் கீழ்ப்படிவார்கள்?
கருத்துகள்
கருத்துரையிடுக